ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்பூரில் நடக்கிறது. பிளே ஆப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டமான இதில் பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லாத ஆட்டம் என 19 புள்ளிகளை குவித்து முதலிடத்துடன் நிறைவு செய்திருந்தது. அந்த அணி 2014-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் முதன்முறையாக பிளே ஆஃப் சுற்றில் விளையாடுகிறது.
பின்வரிசையில் நேஹல் வதேரா, ஷசாங் சிங் ஆகியோர் தங்களது அதிரடியால் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் கொண்டவர்களாக திகழ்கின்றனர்.
பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்காவின் மார்கோ யான்சன், ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராகுவதற்காக தாயகம் திரும்பி உள்ளார். இதனால் அவர், பிளே ஆஃப் சுற்றில் விளையாடமாட்டார். இது பஞ்சாப் அணிக்கு சற்று பின்னடைவை கொடுக்கக்கூடும்.
விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி இரு லீக் ஆட்டங்களில் விளையாடாத சுழற்பந்து வீச்சாளரான யுவேந்திர சாஹல் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும்.
சுழலில் அவருடன் ஹர்பிரீத் பிராரும் பலம் சேர்க்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் சீரான திறனை வெளிப்படுத்தி வரும் அர்ஷ்தீப் சிங், பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுப்பார் என நம்பலாம்.
பெங்களூரு அணி தனது கடைசி ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் 228 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணி 8 பந்துகளை மீதம் வைத்து 18.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 230 ரன்கள் குவித்து வெற்றி பெற்று அனைவரையும் வியக்கவைத்தது.
பொறுப்பு கேப்டனான ஜிதேஷ் சர்மா அசாத்தியமான வகையில் மட்டையை சுழற்றி 33 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 85 ரன்களும் விளாசி மிரட்டினார். அவரது அதிரடியின் காரணமாகவே பெங்களூரு அணி வெற்றி பெற்று லீக் சுற்றை 2-வது இடத்துடன் நிறைவு செய்ய முடிந்தது. வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், டிம் டேவிட் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும் என எதிர்பார்கப்படுகிறது. ஹேசில்வுட் வருகை பந்துவீச்சுக்கு பலம் சேர்க்கக்கூடும்.
இன்றைய போட்டி நடைபெறும் மைதானத்தில் நடப்பு சீசனில் பஞ்சாப் – பெங்களூரு அணிகள் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி லீக் ஆட்டத்தில் மோதி இருந்தன. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.