தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். இந்த நிலையில் ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
பின்னர் இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் தெரிவித்திருப்பதாவது:- பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன்.
ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமான கொலோன் தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க, ஆட்சிக்கு வந்ததுமே 1.25 கோடி ரூபாயை வழங்கியது நமது திராவிட மாடல் அரசு! அது வீணாகவில்லை என்பதை இங்குள்ள Dr. Sven Wortmann, Mr. Sharon Nathan, Mrs. Daria Lambrecht ஆகியோரின் தமிழார்வத்தைக் கண்டபோது அறிந்து மகிழ்ந்தேன். சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவை, திருச்சியிலும் மாபெரும் நூலகங்களை அனைவருக்குமான அறிவு மையங்களாக அமைத்து வரும் நமது முயற்சிகளுக்கு நல்லூக்கமாக இந்த ‘Cologne Library Visit’ அமைந்தது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.