தஞ்சை மாவட்டம்பாபநாசம் அருகே திருகருகாவூரில் அமைந்துள்ள கர்ப்பகரட்சாம்பிகை அம்மன் ஆலயத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளி ரதம் உருவாக்கப்படுகிறது. இதற்காக இந்த கோவிலில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 408 கிலோ வெள்ளியை, வெள்ளி ரதம் செய்யும் ஸ்தபதியிடம் அமைச்சர் சேகர்பாபு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் நேற்றுஇரவு ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
பொதுமக்கள் வசதிக்காக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் மின் தூக்கி (லிப்ட்) பணிகள் எதிர்வரும் ஜூலை மாதம் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதன் பணிகள் சற்று காலதாமதம் ஆகிறது. கால தாமதத்திற்கான காரணம் குறித்து சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறேன்.
மருதமலைக்கு ஒரு மின் தூக்கி (லிப்ட் )உருவாகி வருகிறது .இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் லிப்ட் சேவையில் ஒரு கட்ட பணிகள் நிறைவு பெற்றுவிட்டன, இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
திராவிட மாடல் ஆட்சியில் தான் சோளிங்கர் நரசிங்க பெருமாள் ஆலயத்திலும், அய்யர் மலையிலும் ரோப் கார் சேவைகள் தொடங்கப்பட்டது.
திருக்கழுகுன்றம், திருப்பரங்குன்றம்,
ஆகிய கோவில்களுக்கு புதிய ரோப் கார் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கும்.
பக்தர்கள் வசதிக்காக பழனி மலையில் மேலும் ஒரு ரோப் கார் சேவை புதிதாக அமைக்கப்பட உள்ளது .
திராவிட மாடல் ஆட்சியில் நாகை மாவட்டம் திருப்புகழூரில் 3000 வது கோவில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.