திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஸ்கேன் டெக்னீசியனாக பணியாற்றி வருபவர் வில்லியம் (44). இவர் நேற்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி கிரிஜா என்பவர் தனது உறவினர் ஒருவருக்கு ஸ்கேன் எடுப்பதற்காக அழைத்து வந்து. உடனே அவருக்கு ஸ்கேன் எடுக்குமாறு கூறியுள்ளார். அதற்கு வில்லியம், ஏற்கனவே பதிவு செய்தவர்கள் காத்திருக்கின்றனர். வரிசைப்படி தான் ஸ்கேன் எடுக்க முடியும்,ஆகவே வரிசையில் வாருங்கள் என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கிரிஜா ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு வில்லியம்சை காலால் எட்டி உதைத்தார்.இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது குறித்து வில்லியம் கொடுத்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் கிரிஜா மீது பொது இடத்தில் ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள கிரிஜா தொடர்ந்து திருச்சி மாநகர காவலர்களையும் காவல் அதிகாரிகளையும் சட்டக் கல்லூரி மாணவி என்ற போர்வையில் மிரட்டுவதாக தொடர்ந்து புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே பணியில் இருந்த காவலர்களை மிரட்டியது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.