மதுரையில் நேற்று நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அது பெரியார், அண்ணா ஆகியோரை அவமரியாதை செய்யும் வகையில் இருந்ததாக பலரும் குற்றம் சாட்டினர்.
இத்தனைக்கும் இந்த மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு , ராஜேந்திர பாலாஜி, மதுரை முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் இந்த வீடியோ வெளியிட்டபோது அதிமுக தலைவர்கள் வாயே திறக்கவில்லை.
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி மட்டும் இது குறித்து பேசினார். அவர் கூறியதாவது:
பெரியார், அண்ணாவை விமர்சிக்கும் வகையிலான வீடியோ ஒளிபரப்பப்பட்டது வருத்தமளிக்கிறது. அண்ணா இல்லையெனில் என்னை போன்றவர்கள் அரசியலுக்கே வந்திருக்க முடியாது. அந்த வீடியோவை தயாரித்தவர்கள் யார் என்று தெரியாது. ஒரு நிகழ்ச்சியில் நடக்கின்ற 99 சதவீத நல்ல நிகழ்வுகளை பற்றி நாம் பேசுவோம்.. அதில் நடந்த ஒரு நிகழ்வை பற்றி பேசி அந்த மாநாட்டின் ஒட்டுமொத்த கருத்துக்களையும் புறக்கணிக்க முடியாது. அண்ணாவை புறக்கணிப்பது போல.. வஞ்சிப்பது போல வீடியோ வந்திருப்பது வருத்தமளிக்கிறது. அதனை தவிர்த்து இருக்கலாம். இன்றைய சூழ்நிலையில் மறைந்த தலைவர்களை பற்றி நல்ல நிகழ்வுகளை பற்றி பேசுவது தான் சரியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
ராஜேந்திர பாலாஜியின் இந்த கருத்து குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேட்டபோது அவர், ராஜேந்திர பாலாஜி என்ன கூறினார் என்பதை நான் இன்னும் பார்க்கவில்லை. என்று கூறிவிட்டார்.
ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. முருகர் மாநாட்டில் அண்ணாவை விமர்சித்ததை அதிமுக தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.