தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும் மக்களை பாதிக்கும் வகையில் கண்டிப்பாக பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்திருக்கிறார். தனியார் பேருந்து உரிமையாளர்கள் டீசல் விலை உயர்வு காரணமாக அரசின் நிலைப்பாட்டை அறிந்து தங்கள் பேருந்துகளில் கட்டண உயர்வு வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.
அதன் அடிப்படையில் நீதிமன்றம் பொது மக்களின் கருத்தை கேட்க அறிவுறுத்தி உள்ளது. எனவே நீதிமன்ற உத்தரவின் பெயரில் பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. நீதிமன்றத்தில் அரசு பேருந்துகளின் பேருந்து கட்டண உயர்வு செய்யப்பட மாட்டாது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது. எனவே சமூக வலைதளங்களில் பேருந்து கட்டணம் உயர்வு என்று வரும் செய்தி பொய்யானது. தமிழகத்தில் அரசு பேருந்து கட்டண உயர்வு கிடையாது.
இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
