புதுக்கோட்டை திருமயம் சாலையில் உள்ள அரசு மன்னர் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாவட்ட மனநல திட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்களின் மன உறுதி காக்கும் “மனம்” திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கான “மனநல மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா கலந்து கொண்டு மனநல மேம்பாட்டு பயிற்சியினை தொடங்கி வைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். மேலும் இதில் பயிற்சி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு பேஜ் வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, “செப்டம்பர் மாதத்தில் தற்போது வரை டெங்குவால் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பகுதிகளை வைத்துக்கொள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் அறிவுறுத்தியதன்பேரில்,அனைத்து பகுதிகளிலும் மாஸ் கிளீனிங் செய்யப்பட்டு வருகிறது, அதேபோல் கடந்த ஆண்டு டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளிலும் தற்போது கடந்த 15 தினங்களில் எந்தெந்த பகுதிகளில் இருந்து புதிய டெங்கு பாதிப்பு வந்துள்ளது என்பதை கண்டறிந்து பொது இடங்கள் உட்பட பள்ளிக்கூடங்கள், விடுதிகள் உள்ளிட்ட இடங்களிலும் தூய்மையாக வைத்துக் கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, கந்தர்வகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு பாதிப்பு கொஞ்சம் அதிகமாக உள்ளது. அதற்கு காரணம் தேங்காய் சிரட்டையில் தண்ணீர் தேங்குவதால் அதில் கொசுப்புழு உற்பத்தியாகி டெங்கு பரவுவதாக கூறியுள்ளனர். அதை வேளாண்துறை அதிகாரிகள் மூலம் அவர்களுக்கு தகவல் தெரிவித்து அதனை உடனடியாக தூய்மைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதுடன் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வாட்ஸப் குழுவும் தொடங்கப்பட்டு அதன் மூலம் உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்பட்டு டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எது போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம். காலநிலை மாற்றம் ஏற்படுவதால் காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்றாவது நாள் மற்றும் ஐந்தாவது நாளில் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.