Skip to content

சிறந்த திருநங்கை விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..

  • by Authour

திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவைபுரிந்து, அவர்களுள் முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவருக்கு தமிழக அரசால் சிறந்த திருநங்கைக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.  2021ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15ம் தேதி அவர்களை சிறப்பிக்கும் பொருட்டு இந்த விருது வழங்கப்படுகிறது.   சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் விருது பெறும்  நபர் தேர்வு செய்யப்படுகிறார்.  இந்த விருதிற்கு தேர்ந்தெடுக்கப்படும் திருநங்கைக்கு ரூ. 1 லட்சத்திற்கான  காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

சிறந்த திருநங்கைக்கான விருது பெற்ற சந்தியா தேவி..  

அந்தவகையில் நடப்பாண்டு கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவிக்கு விருது அறிவிக்கப்பட்டது. இவர்  பூ கட்டும் தொழில் செய்து தன் வாழ்க்கையை நடத்தி வருவதுடன்,  வில்லிசையில் ஆர்வம் ஏற்பட்டு புராணக் கதைகளை படித்து தன் தனித் திறமையால் வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதுவரை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 1000-க்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.  வில்லிசை நிகழ்ச்சி மூலம் கொரோனா விழிப்புணர்வு, சமூக நலத் திட்டங்கள், வரதட்சணை தடுப்பு, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பல திருநங்கைகளுக்கு சுயமாக வருமானம் ஈட்டும் வகையில் வில்லிசையை கற்றுக் கொடுத்து,  கிராமிய கலைகளில் ஈடுபட உதவி வருகிறார்.

அத்துடன் தோவாளையைச் சார்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு ஏழை சிறுவனின் படிப்பிற்கான அனைத்து செலவுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி 8 வயது மனவளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை தத்தெடுத்து பராமரித்து வருகிறார். இவ்வாறு, திருநங்கைகள் சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ்ந்து, திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக வில்லிசையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை புரிந்து வரும்  சந்தியா தேவிக்கு  2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது வழங்கப்பட்டிருக்கிறது.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது, 1 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிழை வழங்கி பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதாஜீவன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!