ஓரணியில் தமிழ்நாடு என்ற மாபெரும் திமுக உறுப்பினர் சேர்க்கை பரப்புரை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது: ஓரணியில் தமிழ்நாடு என்ற மகத்தான முன்னெடுப்பை தொடங்கி வைத்துள்ளேன். ஜூலை 3 முதல் வீடு வீடாக சென்று மக்களை சந்திப்போம், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தங்கள் வாக்கு எந்த இடத்தில் உள்ளதோ அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு அமைச்சர்கள், எம்.பி. எம்.எல்.ஏக்கள் செல்வார்கள். 45 நாட்கள் இந்த முன்னெடுப்பு நடைபெறும். நாளை இந்த திட்டத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்துவோம். இது மண், மொழி, மானம் காக்க ஒன்றிணைக்கும் முன்னெடுப்பு. இதில் சுமார் 1 லட்சம் குடும்பங்களை இயைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து துறைகளிலும் வளா்ச்சி அடைந்த தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது. தமிழ்நாட்டுக்காக மத்திய அரசு எந்த சிறப்பு திட்டத்தையும் தர வில்லை. பள்ளி கல்விக்கான நிதியை வழங்க மத்திய அரசு மறுக்கிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கு கூட தமிழ்நாடு தான் நிதி தருகிறது.
தமிழ்நாட்டின் பெருமை வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக கீழடி ஆய்வறிக்கையை கூட வெளியிட மத்திய அரசு மறுக்கிறது. மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் மத்திய அரசு திட்டமிடுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தயாராகி விட்டது. அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வரும்போது எல்லாம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். நீட் காரணமாக தமிழ் மாணவர்களின் மருத்துவ கனவு கலைந்து போகிறது. தேசிய கல்வி கொள்கை என்பது இந்தி திணிப்பாகத்தான் இருக்கிறது.
அனைவரது வீடுகளுக்கும் சென்று அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி மக்களை சந்திக்க உள்ளோம். நெஞ்சுரம் உள்ள அரசியல் சக்தியை உருவாக்கவே இந்த பரப்புரை இயக்கத்தை தொடங்கி இருக்கிறோம். 2026 தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம். தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்.
தமிழ்நாட்டின் மண், காக்க இந்த இயக்கம் நடத்தப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உரிமை நிதி தருவதில்லை. விடுபட்ட பெண்களுக்கு செப்டம்பருக்குள் உரிமைத்தொகை வழங்கப்படும். மேலும் பல கட்சிகள் திமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது.
திருப்புவனம் சம்பவத்தில் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.