கமல்ஹாசன் நடித்த தக்லைப் படம் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்தது கன்னடம் என்றார்.
கமலின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. கமல் மன்னிப்பு கேட்காவிட்டால், கர்நாடகத்தில் தக் லைப் படத்தை திரையிட விடமாட்டோம் என அங்குள்ள அமைப்புகள் கூறியது. கர்நாடக அமைச்சரும் கூறினார்.கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கமலுக்கு கண்டம் தெரிவித்தார். ஆனால் கமல், நான் தவறு செய்யவில்லை. எனவே மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றார்.
இந்த நிலையில், நடிகர் கமலின் ராஜ்கமல் பட நிறுவனம் , கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தது. அதில் கர்நாடகத்தில் தக் லைப் படத்தை வெளியிட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.
இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நாகபிரசன்னா கூறியதாவது:
கமல் ஏன் ஏன் மன்னிப்பு கேட்க கூடாது. எந்த அடிப்படையில் கன்னடா தமிழில் இருந்து பிறந்தது என்றீர்கள். நீங்கள் வரலாற்று ஆய்வாளரா? உங்கள் பேச்சால் சிவராஜ்குமாருக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. பேச்சுரிமையை யாரும் தவறாக பயன்படுத்தக்கூடாது. இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியில் பாதுகாப்பு கொடுத்து தக் லைப் படத்தை ஏன் கர்நாடகத்தில் வெளியிட வேண்டும். மன்னிப்பு கேட் க தயார் இல்லை என்றால் கர்நாடகத்தில் ஏன் படத்தை வெளியிட வேண்டும்.
நீங்கள் ஏற்படுத்திய பிரச்னைக்கு இப்போது போலீஸ் பாதுகாப்பு கேட்டு வியாபாரத்திற்காக வந்திருக்கிறீர்கள். நீர், நிலம் ,மொழி குடிமக்களுக்கு முக்கியமானது. நீங்கள் பிடிவாதமாக இருந்தால் நாங்கள் பதில் சொல்கிறோம். நிலைமை கைமீறி செல்ல நீங்கள் தான் காரணம் கமலுக்குநீங்கள்( வக்கீல்) அறிவுரை கூறுங்கள். உடைந்த முட்டையை ஒட்டவைக்க முடியாது. மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்த யாருக்கும் உரிமையில்லை.
கமல் தரப்பு வழக்கறிஞர்: சூழலை சுமூகமாகவே முடிக்க விரும்புகிறோம். நிலைமை கைமீறிவிட்டது. தக்லைப் படத்திற்கு தடை விதிப்பது ரசிகர்களின் சினிமா பார்க்கும் உரிமையை மீறிய செயல்.
ஆனாலும் நீதிபதி காட்டமாகவே கேள்விகளை அடுக்கினார். பிற்பகல் 2.30 மணிக்குள் கமல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும். மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று சொல்லும் உங்கள் படம் மட்டும் இங்கு ஓட வேண்டுமா? பிரச்னைக்கு தீர்வு காண நிபந்தனையற்ற மன்னிப்பு கேளுங்கள். அதன் பிறகு மனுவை விசாரிக்கிறோம்.
இவ்வாறு கூறிய நீதிபதி நாகபிரசன்னா வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார். நீதிபதி கமல் மீது காட்டமான கேள்விகளை அடுக்கினார்.
இதனால் நீதிபதிமன்றம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்காது என்பதுடன் படம் அங்கு வெளியாக வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
