திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது.
மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, ஆணையர் சரவணன், மண்டல குழு தலைவர்கள் மதிவாணன்,துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா, ஆண்டாள் ராம்குமார், மாநகராட்சி பொறியாளர் சிவபாதம் உள்ளிட்ட அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தை மேயர் அன்பழகன் தொடங்கி வைத்து பேசியதாவது:
திருச்சி பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பஸ் முனையம் முன்மாதிரி பஸ் முனையமாக விளங்கி வருகிறது. இதனை பெரும் முயற்சி எடுத்து செயல்படுத்திய அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திறந்து வைத்த முதலமைச்சர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருச்சி மாநகராட்சியில் இதுவரை 23 ஆயிரத்து 89 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு்ளது.
மேலும் 870 கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 22 லட்சத்து 83 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதன் உரிமையாளர்கள் பெற்றுச் செல்ல மறுத்த 51 கால்நடைகள் ஏலம் விடப்பட்டு அதன் மூலமாக ரூபாய் மூன்று லட்சம் மாநகராட்சிக்கு வருவாய் கிடைத்துள்ளது என்றார்.
லீலா வேலு (திமுக):
மேலப்புதூரில் தேங்கும் மழை நீர் முதலியார் சத்திரத்துக்கு திருப்பி விடப்படுவதால் முதலியார் சத்திரம் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேயர் அன்பழகன் :உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
சுரேஷ் ( சி .பி .எம்):என்னுடைய வார்டுக்கு உட்பட்ட 80 சாலைகளில் யுனிக்கோடு வசதி இல்லை.
ஆணையர் சரவணன்;-அந்தப் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் சேர்க்கப்படும்.
சுபா (திமுக):
மாநகராட்சி ஐந்து வார்டுகளுக்கு ஒரு இளநிலை பொறியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பஸ் முனைய பணிகள் நிறைவடைந்த பின்னரும் எங்கள் வார்டு பணிக்கு அவர் வருவதில்லை. மேஸ்திரியும் சரியாக வேலைக்கு வருவதில்லை.
மேயர் அன்பழகன்:-திருச்சி மாநகராட்சிக்கு புதிதாக 12 இளநிலை பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. 10 -ந் தேதி தீர்ப்பு வரும்.
ஜவகர் (காங்கிரஸ் ) :-
திருச்சி மாநகராட்சியின் கடன் சுமையை குறைக்க கோவை மாநகராட்சி போன்று சிறப்பு நிதியை மேயர் பெற்று தர வேண்டும்.
மேயர் அன்பழகன் :-
திருச்சி மாநகராட்சியில் ஏராளமான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்காக பொது நிதி அதிகம் செலவிட வேண்டி வருகிறது. தற்போது திருச்சி பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம், காய்கறி அங்காடி,சரக்கு வாகன முனையம் மூலமாக வருடத்திற்கு ரூபாய் 100 கோடி மாநகராட்சிக்கு வருவாய் திரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .ஆகவே படிப்படியாக கடன் சுமை குறையும் .
ந.பிரபாகரன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி ):-
மூன்றாண்டு காலமாக இரட்டை வாய்க்காலை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறேன். தற்போது சந்தானம் வித்தியாலயா பள்ளி முதல் ரயில்வே ட்ராக் வரை ரோடு இரட்டை வாய்க்கால் புதர் மண்டி கிடக்கிறது.
இதனை தூர்வாராவிட்டால் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சுரேஷ் (சி.பி.ஐ ) :
திருச்சி மாநகராட்சியில் 11 நகர் நல மையங்கள் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது.
இதனால் பொதுமக்கள் தகராறு செய்கிறார்கள்.
மேயர் அன்பழகன்:-
இந்த நகர் நல மையங்களை செயல்படுத்துவதற்கு தேவையான டாக்டர்கள், நர்சுகள் மற்றும் இதர பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் இந்த நகர் நல மையங்கள் திறந்து வைக்கப்படும் .
அம்பிகாபதி
(அதிமுக):
திருச்சி இன்டர்நேஷனல் ஏர்போர்ட் பகுதியில் வெளிச்சம் குறைவாக உள்ள பகுதியில் ஹைமாஸ் லைட் பொருத்த வேண்டும்.
அதே போன்று மொராய் சிட்டி எதிர்ப்புறம் மெயின் ரோட்டில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சமுதாய நலக்கூடம் அல்லது வணிக பயன்பாட்டுக்கு கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி ஓயாமரி ,கருமண்டபம் மயானங்களின் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது.
மஞ்சுளா பாலசுப்பிரமணியன் :
(திமுக ) :
எங்கள் வார்டு பகுதியில் பன்றி வளர்க்கிறார்கள்.
ஆணையர் சரவணன் :
பன்றி வளர்க்கும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது .
சீதாலட்சுமி முருகானந்தம் (திமுக ) :
45 வது வார்டு பரமசிவம் தெரு மெயின் ரோடு பாலம் கட்டும் பணிகளை விரைவு படுத்த வேண்டும்.
மஞ்சுளா பாலசுப்பிரமணியன் ( திமுக ) :-
எங்கள் வார்டு பகுதியில் வசித்த மறைந்த கவிஞர் நந்தலாலாவை கௌரவிக்கும் வகையில் திருநகர் 3 -வது பிரதான சாலை பெயரை மாற்றி திருநகர் கவிஞர் நந்தலாலா பிரதான சாலை என மாற்றப்பட்டுள்ளதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பைஸ் அகமது (மனிதநேய மக்கள் கட்சி ):-
மாநகராட்சி திட்டக் குழுவில் நான் உறுப்பினராக உள்ளேன். ஆனால் இதுவரை எந்தக் கூட்டமும் நடத்தப்படவில்லை. எனக்கு அழைப்பும் வரவில்லை.
மேயர் அன்பழகன் :-
சப்ஜெக்ட் இருந்தால் மட்டுமே கூட்டம் நடத்தப்படும்.
எல்.ஐ.சி சங்கர் (திமுக):-
மரக்கடை மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து பழைய முறைப்படியும் சரி, புதிய முறைப்படியும் சரி தண்ணீர் திறந்து விட்ட பின்னரும் மக்களுக்கு சரியாக குடிநீர் கிடைக்கவில்லை. அடிக்கடி ஏற்படும் மின்தடையால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
தொடர்ந்து கருமண்டபம் திருநகர் பிரதான சாலைக்கு கவிஞர் நந்தலாலா பெயர் சூட்டியமைக்காக பல கவுன்சிலர்கள் நன்றி தெரிவித்து பேசினர்.
கூட்டத்தில் மொத்தம் 47 தீர்மானங்கள் ஒருவராக நிறைவேற்றப்பட்டன.