Skip to content

இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை: காப்பாற்ற சென்ற கணவரும் பலி

விழுப்புரம் அருகே உள்ள சோழகனூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் தசரதன் மகன் சக்திபரதன் (26). பால் வியாபாரம் மற்றும் விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமிபுரத்தை சேர்ந்த ராஜகுமாரி (23) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிரதாப் (4) என்ற ஆண் குழந்தையும், இனியா (2) என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

நேற்று காலை வழக்கம்போல் சக்திபரதன், பால் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அவரது மனைவி ராஜகுமாரி, தனது மகனை பள்ளியிலும், மகளை அங்கன்வாடியிலும் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தார். இந்த நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ராஜகுமாரி, தனது கணவரிடம் நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்று கோபமாக கூறிவிட்டு வீட்டின் பின்புறமுள்ள விவசாய கிணற்றை நோக்கி ஓடினார்.

உடனே சக்திபரதன், ராஜகுமாரியை சமாதானப்படுத்த பின்தொடர்ந்து ஓடினார். அதற்குள்ளாக ராஜகுமாரி, கிணற்றுக்குள் குதித்து தத்தளித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக்திபரதன், மனைவியை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்தார். ஆனால் அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தார். அடுத்த சில நிமிடங்களில் ராஜகுமாரியும் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் இருவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!