சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பிரசித்திபெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (73)என்பவர், நேற்று முன்தினம் தனது மகளுடன் தரிசனம் செய்ய வந்திருந்தார். சிவகாமியால் நடக்க முடியாது என்பதால், கோயில் தற்காலிக ஊழியர் அஜித் (29) வீல்சேர் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது சிவகாமியின் மகள், கார் சாவியை அஜித்திடம் கொடுத்த காரை பார்க் செய்து வருமாறு கூறியுள்ளார்.
ஆனால் , அஜித்திற்கு கார் ஓட்ட தெரியாததால் அருகில் இருந்தவரிடம் கூறி காரை பார்க் செய்துவிட்டு சாவியை எடுத்துவந்து சிவகாமியின் மகளிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து சாமி தரிசனம் முடிந்து காரில் புறப்பட்ட போது காரின் பின் சீட்டில் கட்டைப்பையின் அடியில் வைத்திருந்த பத்து சவரன் தங்க நகைகள் காணாமல்போயுள்ளது. இதனையடுத்து சிவகாமி அஜித்திடம் விசாரித்திருக்கிறார். அப்போது அஜித் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து சிவகாமி திருப்புவனம் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அஜித் உள்ளிட்ட சிலரிடம் நேற்று விசாரணை செய்துள்ளனர். அஜித்திடம் விசாரணை மேற்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். உடனடியாக மருத்துவர்கள் பரிசோதனை செய்து, அஜித் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அஜித்தின் உடல் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் விசாரணையின் போது அஜித் துன்புறுத்தப்பட்டதாகக் கூறி, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக திருப்புவனம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி காவலர்கள் கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி ஆஷித் ரவத் உத்தரவிட்டார். மேலும், வெளிப்படையான விசாரனை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.