விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மலையடிப்பட்டி சவுந்திரபண்டியன் நகரில் பூமாரியம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இந்த கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த சிலர், பணம் மற்றும் அம்மன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த 2 சிறுவர்களை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய தெற்கு மலையடிப்பட்டி அண்ணாநகரை சேர்ந்த சுந்தரேசன் (31) என்பவரை தேடிவந்தனர். அவர் சஞ்சீவி மலை பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அங்கு பதுங்கி இருந்த சுந்தரேசனை கைது செய்தனர்.
கோவில் நகைகளை மீட்பதற்காக அவரை அழைத்து சென்றபோது அயன்கொல்லங்கொண்டான் பாலம் அருகே போலீசாரிடம் இருந்து அவர் தப்பி ஓடினார். அப்போது பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் சுந்தரேசனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு காலில் மாவுக்கட்டு போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் இருந்து 4 கிராம் தங்க நகை மற்றும் வெள்ளி சங்கிலியை போலீசார் மீட்டனர். இவர் மீது 20-க்கும்மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீசார் கூறினர்.

