தன்கர் ராஜினாமா செய்ததால் துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்டம்பர் 21ம் தேதி நடக்கிறது. பாஜக வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்தவரும் தற்போது மகாராஷ்டிரா கவர்னருமான சி.பி. ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இந்த நிலையில் சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்கும்படி பாஜக சார்பில் கேட்கப்பட்டது. சிபி ராதாகிருஷ்ணனை போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும் என்றும் பாஜக தரப்பில் வேண்டுகோள் விடப்பட்டது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இது தொடர்பாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினுடன் போனில் பேசி ஆதரவு கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் அளித்த பேட்டியில், தமிழர் என்பதற்காக பாஜக வேட்பாளரை எப்படி ஆதரிக்க முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.