தெலுங்கு திரையுலகில் பழம்பெரும் நடிகராக இருந்தவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். அவருக்கு வயது 83. அண்மைக்காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார். தெலங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு உறவினர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அந்தவகையில் நடிகர்கள் சிரஞ்சீவி, பிரகாஷ் ராஜ், பவன் கல்யாண், முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு , ஹரியாணா ஆளுநர் பண்டாரு உள்ளிட்டோர் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அதேபோன்று ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, “கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஒரு சிறந்த நடிகர். அவருடைய இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. கடந்த 4 தசாப்தங்களாக கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் 750க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 7 நந்தி விருதுகளை பெற்றுள்ள அவர், 5 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். நான் முதல்வராக இருந்த போது மக்கள் பிரதிநிதியாக அவருடன் இணைந்து பணியாற்றிய தருணம் மகிழ்ச்சியளிக்கிறது. அவர் மிகப்பெரிய அளவில் மக்கள் பணி ஆற்றியுள்ளார்” என்று தெரிவித்தார்.
கோட்சா ஸ்ரீனிவாச ராவ், தமிழில் சாமி, குத்து, ஜோர், ஏய், திருப்பாச்சி, பரமசிவன், சத்யம், கோ, சாமி-2, காத்தாடி என பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.