பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா இன்று காலை நடந்தது. உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 5 மணியளவில் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு காலை 5.30 மணியளவில் சித்திரைத் தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். இதையடுத்து காலை 5.45 மணிக்கு மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
காலை 6.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா, ரெங்கா, ரெங்கா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர் கீழச்சித்திரைவீதியிலிருந்து புறப்பட்டு தேர் தெற்குசித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரைவீதிகளில் வலம் வந்தது. தேரோடும் வீதிகளில் பக்தா்கள் வெள்ளம் கரைபுரண்டோடியது. தேரின் முன் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றி வழிப்பட்டனர்.சித்திரை தேர் அழகும், பக்தர்களின் பக்தி வெள்ளமும் இன்று ஸ்ரீரங்கத்துக்கே அழகும் பெருமையும் சேர்த்தது.