உலகின் மிக உயர்ந்த விருதாக கருதப்படுவது நோபல் பரிசு. சுவீடன் நாடு இதனை ஆண்டு தோறும் வழங்குகிறது. ரொக்க பணம், தங்கபதக்கம், ஒரு பட்டயம் என வழங்கப்படுகிறது. இந்த விருது என்பது இன்றளவும் கவுரவம் மிக்கதாக கருதப்படுகிறது.
இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனையாளர்களுக்கு இந்த விருதினை சுவீடன் நாடு வழங்குகிறது.
அதே நேரத்தில் அமைதிக்கான நோபல் பரிசை மட்டும், சுவீடனில் இருந்து பிரிந்த நார்வே நாடு வழங்கி வருகிறது. இந்த விருதினை அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா 2009ம் ஆண்டில் பெற்றார். 1973ம் ஆண்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹென்றி கிஸ்ஸிங்கர் உள்பட பல அமெரிக்கர்கள் இந்த விருதினை பெற்று உள்ளனர்.
கிஸ்ஸிங்கர், வியட்னாம் போரை நிறுத்தியதற்காக இந்த விருதினை பெற்றார்.
தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் டிரம்புக்கும் அமைதிக்கான நோபல் பரிசை பெற வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக வந்து விட்டது போல தோன்றுகிறது. எனவே அதற்கான நடவடிக்கையில் அவரே இறங்கி இருப்பதாக உலக அரசியல் பார்வையாளர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்தியா, கடந்த மே மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை பாகிஸ்தான் மீது மேற்கொண்டது. 8ம் தேதியே போர் நின்று விட்டது என சம்பந்தப்பட்ட நாடுகள் சொல்லும் முன், நான் சொல்லித்தான் இருநாடுகளும் போரை நிறுத்தினார்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் சார்பில், டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இஸ்ரேல், ஈரான் போரையும் தானே நிறுத்தியதாக டிரம்ப் கூறினார்.
இதேபோன்ற ஒரு பரிந்துரையை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் உக்ரைன் நாடாளுமன்ற வெளியுறவுக் குழு உறுப்பினர் மெரெஷ்கோ என்பவரும் செய்திருந்தார்.
ஆனால், அவரே தற்போது தனது பரிந்துரையை வாபஸ் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை நிறுத்தும் அளவுக்கு டிரம்புக்கு திறமை இல்லை என்று கூறி, தனது நோபல் பரிசுக்கான பரிந்துரையை மெரெஷ்கோ வாபஸ் பெற்றுள்ளார்.
நோபல் பரிசுக்கு இந்தியாவும் தன் பெயரை பாிந்துரை செய்யும் என டிரம்ப் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் இந்தியா அப்படிப்பட்ட ஒரு பரிந்துரையை செய்யவில்லை. ஆனால் நடக்கிற காட்சிகளை பார்க்கும்போது நோபல் பரிசு ஆசை டிரம்பை பாடாய் படுத்துகிறது என்பது நன்றாக தெரிகிறது.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்துவதாக டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது உறுதியளித்தார். ஆனால், அவரால் இந்த போரை நிறுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.