திருச்சி புத்தூர், அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள தேநீரகத்தில் பணியாற்றும் ஊழியர், திருச்சி,வரகனேரி,முஸ்லிம் தெரு ஷேக் மகன் தௌபிக் (20) என்பவரிடம், ஒரு மர்ம நபர் தன்னை போலீஸ் என அறிமுகம் செய்துள்ளார். பின்னர், காவல்துறையில் பறிமுதல் செய்து ஏலம் விடப்படும் வாகனங்களை மிகவும் குறைந்த விலைக்கு அவர் வாங்கித்தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய அந்த ஊழியர் மர்ம நபரிடம் , தனக்கு இருசக்கர வாகனம் வாங்கித்தருமாறு கூறி ரூ. 1 லட்சம் கொடுத்துள்ளார்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட மர்ம நபர் வாகனத்தை வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதையடுத்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அரசு மருத்துவமனை போலீஸôர் வழக்குப் பதிந்து மர்ம நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சாலமன்ராஜா மகன் ஜெத்ரோ என்கிற ஷியாம் (24) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
